எழுத்தாளர் சேவியர் அவர்களின் புதிய புத்தகம்
>> Tuesday, July 1, 2008
கிறிஸ்தவம் : ஒரு முழுமையான வரலாறு.
வரலாறுகள் சிலிர்ப்பூட்டுபவை மட்டுமல்ல, நிகழ்காலத்தில் நமக்கு முன்னால் அலட்சியமாய் விரிக்கப்பட்டிருக்கும் காலத்தின் அகோரமான சுவடுகளையும், வலிகளையும் நம் முன்னால் விவரிப்பவையும் கூட.
மதமும் அதன் கோட்பாடுகளும் வலுவாக ஊன்றப்பட்டிருக்கும் ஒரு சமூகத்தில் முளைத்தெழும் எந்த ஒரு புதிய மதமும் நெருஞ்சிகளுக்கிடையே நெருக்கப்படும் கீரைச் செடிபோல கிழிபட்டே ஆகவேண்டும். நிராகரிப்புகளும், அவமானங்களும், துரத்தல்களும், நசுக்கல்களும் மட்டுமே பந்தி விரிக்கப்பட்டிருக்கும் ஒரு பாசறை அது.
ஆழமான வேர்களைக் கொண்டிராத கொள்கைகளும் கோட்பாடுகளும் வலுவிழந்து எதிர்ப்புச் சக்கரங்களில் எழமுடியாதபடி நறுக்கப்படுவதன் காரணமும் இது தான். தன்னை நிலைநிறுத்திக் கொள்ள ஒரு கோட்பாடோ, மதமோ, இயக்கமோ பல நூற்றாண்டுகள் போராட வேண்டியிருக்கும் என்பதன் சாட்சியாய் நிற்கிறது கிறிஸ்தவ வரலாறு.
எல்லா வரலாற்று நிகழ்வுகளுக்கும் உரித்தான பரபரப்பும், வியப்பும், வலியும், பிரமிப்பும் கிறிஸ்தவ வரலாற்றுக்கும் உண்டு. கிறிஸ்தவம் கடந்து வந்த பாதையை ஒருமுறை திரும்பிப் பார்க்கையில் எழும் உணர்வுகளுக்கு என்ன பெயடுவதென்று தெரியவில்லை.
கிறிஸ்தவம் எல்லா மதங்களுக்கும் உள்ள பலத்தோடும், பலவீனத்தோடும் தான் பரவி வந்திருக்கிறது என்பதை கிறிஸ்தவ வரலாற்றின் குருதிக் கறை படிந்த பக்கங்கள் விளக்குகின்றன. பிறரால் தாக்கப்பட்ட கிறிஸ்தவம் வெளித் தாக்குதல் நின்றபின் உள்ளுக்குள் போர்களைத் தீவிரப்படுத்திய நிகழ்வுகள் ஏராளம்.
யார் பெரியவன், எது சரியானது எனும் போராட்டங்களின் பிள்ளைகளாக இன்று உலகெங்கும் பரவிக் கிடக்கும் கிறிஸ்தவக் குழுக்களில் எது சரியானது ? எல்லாம் சரியானதெனில் ஏன் இத்தனை பிரிவுகள் ? கிறிஸ்தவம் புனிதமா ? அவமானமா ? என வரலாறு சொல்லும் விஷயங்களின் சுவாரஸ்யம் நீள்கிறது.
கிறிஸ்தவ வரலாற்று நூல்களை சிறு வயது முதலே படித்து வந்த அனுபவம் இந்த நூலை சரியான கோணத்தில் எழுத எனக்கு துணை செய்திருக்கிறது. எந்தப் பிரிவு கிறிஸ்தவத்தையும் சாராமல் உண்மை நிலையை அதன் புனிதக் கூறுகளோடும், புழுதிக் கூறுகளோடும் , அமைதி வாசனையோடும், போரின் நெடியோடும் உண்மையை உள்ளபடி சொன்ன திருப்தி இருக்கிறது.
கிறிஸ்தவ வரலாற்றை முழுமையாய் சொல்லவேண்டுமெனில் ஆயிரம் பக்கங்களேனும் எழுதவேண்டும். குறைந்த பட்சம் ஐநூறு பக்கங்களேனும் தேவைப்படும். ஆனால் அந்த வரலாற்றை அதன் முக்கியத்துவம் சிதையாமல், புள்ளி விவரங்களால் போரடிக்காமல், வெறும் 210 பக்கங்களுக்குள் அடக்கி விட முடிந்ததையே முதல் வெற்றி என நினைத்துக் கொள்கிறேன்.
நண்பர்கள் பென் கிருபா, சுதாகர் மற்றும் சில இறையியல் வல்லுனர்களின் உதவி இல்லாவிட்டால் இந்த நூல் முழுமையடைந்திருக்க வாய்ப்பே இல்லை.
இந்த நூலினை வெளியிட்டிருக்கும் கிழக்கு பதிப்பகம் இந்த நூலுக்காக நிறைய உழைத்திருக்கிறது. இதிலுள்ள வரலாற்றுத் தகவல்களை சரிபார்த்ததுடன் இந்த நூலிலுள்ள விவிலியப் பெயர்களை வெகுஜன வாசிப்புக்குத் தக்க வகையில் ஆங்கிலப் படுத்தி பெருமை கிழக்குப் பதிப்பகத்துக்கே சாரும். நூலை வெளியிட்டமைக்காகவும், நூலை சிறப்புற வடிவமைத்தமைக்காகவும் கிழக்குப் பதிப்பகத்துக்கு என் மனமார்ந்த நன்றிகள்.கிழக்கு பதிப்பகம்
விலை : ரூ 100
http://sirippu.wordpress.com/2008/06/30/my_10th_book/#comment-2657
0 கருத்துரைகள்:
Post a Comment