தொழில்நுட்ப வட்டாரங்களில் பேரதிர்ச்சி அலை:இந்திய தொழிலதிபர் மகிந்தவின் ஆலோசகர் ஆகின்றார்:
>> Sunday, February 15, 2009
|
|
இந்திய தொழிலதிபரான என்.ஆர்.நாராயணமூர்த்தி சிறிலங்காவின் அரச தலைவர் மகிந்த ராஜபக்சவின் தொழில்நுட்ப ஆலோசகராக நியமனம் பெறுகின்றார். நாராயணமூர்த்தியின் இந்தச் செயலானது பெரும் அதிர்ச்சி அலைகளை அரசியல், வர்த்தக, நிதித்துறை வட்டாரங்களில் தோற்றுவித்துள்ளது. |
இந்திய தகவல் தொழில்நுட்ப நிறுவனமாகிய "இன்ஃபோசிஸ்" நிறுவனத்தின் தலைவர் என்.ஆர்.நாரயணமூர்த்தி, சிறிலங்கா அரச தலைவர் மகிந்த ராஜபக்சவின் தகவல் தொழில்நுட்ப ஆலோசகராகச் செயற்படுவதற்கு விடுக்கப்பட்ட அழைப்பை ஏற்றுக்கொண்டுள்ளார். நாராயணமூர்த்தி உருவாக்கிய "இன்ஃபோசிஸ்" நிறுவனம் இன்று அனைத்துலக அளவில் புகழ்பெற்று விளங்குகிறது. இந்த நிறுவனத்தின் தலைமைப் பொறுப்பில் இருந்து அவர் விலகினாலும், தொடர்ந்தும் இயக்குநர் குழுவில் ஒருவராக அவர் விளங்குகின்றார் கடந்த வெள்ளிக்கிழமை கொழும்பில் நடைபெற்ற ஆங்கிலம் மற்றும் தகவல் தொழில்நுட்பம் குறித்த கருத்தரங்கில் கலந்து கொள்ளுமாறு நாராயணமூர்த்திக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. அந்த மாநாட்டில் அரச தலைவர் மகிந்த ராஜபக்ச, இந்திய தகவல் தொழில்நுட்பத்துறையின் தந்தை என்று அழைக்கப்படும் நாராயணமூர்த்தியின் ஒத்துழைப்பைப் பெற்று முன்னேற சிறிலங்கா அரசு முடிவு செய்துள்ளது என அறிவித்தார். "இது விவகாரமான நிறுவனப் பங்களிப்புக்கள் பகிரங்கப்படுத்தப்படவில்லை என்றாலும், சிறிலங்கா அரசு - "இன்ஃபோசிஸ்" நிறுவன வர்த்தக உடன்படிக்கையே" இது என கொழும்பு ஆய்வாளர் ஒருவர் கருத்து வெளியிட்டுள்ளார். தமிழினப் படுகொலைப் போரின் அதிகரித்த செலவீனம் மற்றும் தவறான கையாடல்கள் காரணமாக சிறிலங்கா அந்நிய செலவாணி பெரும் நெருக்கடிகளைச் சந்திக்கும் வேளையில் - இவ்வாறாக மனித நேயங்களை புறக்கணித்து, இந்திய தொழில் அதிபர்களும், தொழில் நிறுவனங்களும் சிறிலங்காவில் முதலீடு செய்து வருவது விசனத்திற்குரியது என தமிழக தொழில்நுட்பவியல் வட்டாரங்களைச் சேர்ந்த ஒருவர் புதினத்தின் சென்னை செய்தியாளரிடம் சுட்டிக்காட்டினார். முக்கியமாக, பொதுமக்களை பங்குதாரர்களாகக் கொண்ட நிறுவனமாகிய "இன்ஃபோசிஸ்" (நியூயோர்க் பங்கு சந்தை குறியீடு INFY) அதன் இயக்குனர்களில் ஒருவரான நாராயணமூர்த்தியுடன் கூட்டிணைந்து, தமிழின அழிப்பில் ஈடுபடும் சிறிலங்கா அரசுடன் கை கோர்த்து நிற்பதனை உலகு எங்கும் வாழும் பங்குதாரர்கள் நல்ல விதமாகப் பார்க்கமாட்டார்கள் என வர்த்தக-நிதித்துறை வட்டாரங்கள் சில கருத்து வெளியிட்டன. இது தொடர்பாக "புதினம்" செய்தியாளரிடம் நியூயோர்க்கில் கருத்து வெளியிட்ட அரசியல் அவதானி ஒருவர், சூடான் இனப்படுகொலை விவகாரத்தை சுட்டிக்காட்டினார். சூடான், டாஃபூர் இனப் படுகொலையினை, கனடா, கல்கரியில் உள்ள பங்குதாரர்களைக்கொண்ட கனடிய நிறுவனமாகிய "ரலிஸ்மன் எனெர்ஜி"யின் (Talisman Energy: NYSE TLM) முதலீடுகள் ஊக்குவிப்பதாக குற்றம்சாட்டி - கனடாவிலும், உலகு எங்கும் இருக்கும் அதன் பங்குதாரர்கள் தொடர் எதிர்ப்பு காட்டியதால், அந்த நிறுவனம் சூடானில் இருந்து சில வருடங்களுக்கு முன்பாக விலகிக்கொள்ள நேர்ந்தது குறிப்பிடத்தக்கது என அவர் தெரிவித்தார். "இன்ஃபோசிஸ்" நிறுவனத்தின் இணையத்தளத்தில் தெரிவிக்கப்படுள்ள அதன் கோட்பாடுகளுக்கு அமைய நடப்பதாயின், மகிந்த ராஜபக்ச போன்றவர்களின் அரசுடன் நாரயணமூர்த்தி எந்தவொரு தொடர்பினையும் கொண்டிருக்கக் கூடாது என மனித உரிமை ஆர்வலர்களும் கருத்து வெளியிட்டுள்ளனர். "தமிழினப் படுகொலை புரியும் மகிந்த ராஜபக்சவின் அழைப்பை நாரயணமூர்த்தி நிராகரிக்க வேண்டும்" எனவும் அவர்கள் மேலும் தெரிவிக்கின்றனர். |
http://www.puthinam.com/full.php?2bXPtRe0dfk6n0ecCD4X3b4PcFV4d2g2d3cc2BmU2d439SP3b026Sp3e
0 கருத்துரைகள்:
Post a Comment