விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதிகள் எனக் கூறப்பட்ட புதுக்குடியிருப்புப் பகுதிகளில் அண்மையில் படையினரால் கைப்பற்றப்பட்ட பகுதிகள் மீது இன்று அதிகாலை முதல் விடுதலைப் புலிகள் ஊடுருவித் தாக்குதல் ஒன்றை நடத்தியதாகத் தெரியவருகிறது. இத்தாக்குதல் நடவடிக்கையில் விடுதலைப் புலிகளின் விசேட படையணிகள் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக படைத் தரப்புடன் தொடர்புடைய வட்டாரங்களில் இருந்து தெரியவருகிறது.
இந்த ஊடுருவித் தாக்குதல்களை நடத்திய புலிகளின் படைப்பிரிவுகள் மீண்டும் திரும்பியிருக்கவில்லை எனவும் படையினரால் விடுவிக்கப்பட்ட பகுதிகளுக்கு நீண்டதூரம் ஊடுருவிச் சென்றிருக்கலாம் எனவும் படைத்தரப்பு அதிகாரிகள் அச்சம் வெளியிட்டுள்ளனர்.
இந்த மோதல்களின் போது விடுதலைப் புலிகள் ஒரு தொகுதியினரின் சடலங்களை தாம் கைப்பற்றியிருப்பதாகவும் படையதிகாரிகள் தரப்பில் இருந்து தெரிவிக்கப்படுகிறது. இந்த சடலங்களின் எண்ணிக்கை 80 வரையில் இருக்கலாம் எனவும் அவர்கள் தெரிவித்தனர்.
பதிலுக்கு படைத்தரப்பும் கணிசமான அளவில் இழப்புக்களைச் சந்தித்திருப்பதாக தெரியவருகிறது. அண்மையில் புதுக்குடியிருப்புச் சந்திவரையிலான பகுதிகளை பெரும் முயற்சியின் பின் படையினர் கைப்பற்றி இருந்தனர். விசுவமடுவில் இருந்து புதுக்குடியிருப்பு வரையில் படையினர் கைப்பற்றி இருந்த பகுதிகளுடாகவே ஊடுருவித் தாக்குதல்கள் இடம்பெற்றதாக தெரிவிக்கப்படுகிறது.
ஏற்கனவே விஸ்வமடுப் பகுதியில் மோதல்கள் இடம்பெற்றனை படைத்தரப்பு உறுதிப்படுத்தி இருந்தது.
எனினும் இந்த மோதல்களில் 150 வரையிலான சடலங்களை தாம் மீட்டதாக படைத்தரப்பினர் தெரிவித்திருப்பதோடு பாதுகாப்பு அமைச்சின் இணையத்தில் விடுதலைப் புலிகள் தரப்பில் கொல்லப்பட்டவர்களின் சடலங்கள் சிலவற்றின் படங்களை பிரசுரித்தும் உள்ளனர்.
இந்த நிலையில் முன்னோக்கிச் செல்லும் படையினரை ஊடறுத்து தாக்கும் புலிகளின் அணிகளில் கொல்லப்படுபவர்கள் தவர்ந்த ஏனையோர் படையினர் கைப்பற்றி தமது நிலைகளை உறுதிப்படுத்திய பகுதிகளுக்குள் ஆழ ஊடுருவிச் செல்வதாக படைத்தரப்பில் கவலை வெளியிடப்பட்டுள்ளது.
அதனால் தற்போது படையினரின் முன்னேறித் தாக்குதல் தந்திரோபாயத்தில் மாற்றங்களை ஏற்படுத்த நிர்ப்பந்திக்கப்பட்டு உள்ளதுடன் கைப்பற்றப்பட்ட பிரதேசங்களுக்குள் புகுந்து தாக்குதல் நடத்தும் புலிகளை எதிர் கொள்ள சில அடுக்கு படையணிகளை பின்நோக்கி நகர்த்தும் இக்கட்டான நிலைக்குத் தள்ளப்பட்டு உள்ளதாகவும் படைத்தரப்பில் இருந்து தெரியவருகிறது.
http://www.nerudal.com/nerudal.1585.html
0 கருத்துரைகள்:
Post a Comment