ஒகேனக்கல் பிரச்னை: ரசிகர்களுக்கு ரஜினி கட்டளை
>> Wednesday, April 9, 2008
ஒகேனக்கல் பிரச்னை: ரசிகர்களுக்கு ரஜினி கட்டளை
ஒகேனக்கல் கூட்டு குடிநீர் திட்டத்தை நிறைவேற்ற விடாமல் எதிர்ப்பு தெரிவிக்கும் கர்நாடகத்தை கண்டித்து, தமிழ் திரைப்பட கலைஞர்கள் சென்னையில் உண்ணாவிரதப் போராட்டம் நடத்தினர். அதில் பங்கேற்ற ரஜினி, கர்நாடக போராட்டகாரர்களுக்கு எதிராக ஆவேசமாக பேசினார்.
இதற்கு, அம்மாநிலத்தில் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. ஆங்காங்கே ரஜினி படங்களையும், அவரது உருவ பொம்மையையும் எரித்து வருகின்றனர். கன்னட வெறியர்களின் இச்செயல்கள், ரஜினி ரசிகர்களை ஆத்திரமடையச் செய்துள்ளது.
மேலும், உண்ணாவிரத போராட்டத்தின்போது நடிகர் சத்யராஜ் மறைமுகமாக ரஜினியை தாக்கி பேசியதும் ரசிகர்களை ஆத்திரப்பட வைத்துள்ளது. இதனால், கர்நாடகாவிற்கு எதிராகவும், சத்தியராஜுக்கு எதிராகவும் பல இடங்களில் கண்டன போஸ்டர்களை ஒட்டி பரபரப்பு ஏற்படுத்தி வருகின்றனர்.
கர்நாடகாவிற்கு எதிர்ப்பு தெரிவித்து கும்பகோணம் ரஜினி ரசிகர் மன்றத்தின் சார்பில், கண்டனம் தெரிவிக்கப்பட்டுள்ளது. "ரஜினியை குறை கூறி பேசிய கன்னடர்கள் கும்பகோணம் பகுதி கோவில்களுக்கு வந்தால் கருப்புக் கொடி காட்டுவோம்' என்று எச்சரித்துள்ளனர்.
கும்பகோணத்தை சுற்றியுள்ள பகுதியில், பிரசித்தி பெற்ற கோவில்கள் பல உள்ளன. கர்நாடக மாநிலத்தில் கடந்த முறை தேர்தல் நடந்த போது, முக்கிய அரசியல் கட்சிகளைச் சேர்ந்த தலைவர்கள் கும்பகோணம் பகுதிகளில் உள்ள கோவில்களுக்கு வந்து சென்றனர்.
கர்நாடகாவில் விரைவில் தேர்தல் நடக்க உள்ளது. தேர்தலில் போட்டியிடுபவர்கள் இந்த முறை கும்பகோணம் பகுதிகளில் உள்ள கோவில்களுக்கு வந்தால், எதிர்ப்பு தெரிவிப்போம் என்று ரஜினி ரசிகர்கள் தெரிவித்துள்ளனர்.
ரஜினி "வாய்ஸை' எதிர்க்கும் கன்னட அமைப்புகளுக்கு எதிர்ப்பு தெரிவிக்கவும், ரஜினியை பற்றி தமிழகத்தில் "ஏடா கூடமாக' பேசுபவர்களை கண்டித்தும், மாநிலம் முழுவதும் கண்டன போராட்டம் நடத்த ரஜினி ரசிகர்கள் திட்டமிட்டுள்ளனர். இதற்காக பல மாவட்ட நிர்வாகிகள் கலந்தாலோசனையும் நடத்தியுள்ளனர்.
போராட்டத்திற்கு ரஜினியின் ஒப்புதலை பெறுவதற்காக, ரஜினி ரசிகர் மன்றத் தலைவர் சத்யநாராயணனை சில நிர்வாகிகள் நேரில் சந்தித்து பேசினர். அப்போது, "இந்த பிரச்னை குறித்து நான் எதுவும் முடிவு சொல்ல முடியாது, ரஜினியும் விரும்ப மாட்டார்' என்று கூறியுள்ளார்.
ரஜினியை எதிர்ப்பவர்களுக்கு, கண்டிப்பாக எதிர்ப்பு தெரிவித்தே ஆக வேண்டும் என்று முக்கியமான நிர்வாகிகள் பலர் வலியுறுத்தியதால், "நீங்கள் ரஜினியிடம் நேரில் பேசிக் கொள்ளுங்கள்' என்று சத்யநாராயணன் கூறியுள்ளார்.
இதனால், ரசிகர் மன்றத்தை சேர்ந்தவர்கள் சிலர், ரஜினியை சந்திந்து பேசினர். அப்போது, "நாம் நல்லதை நினைக்கிறோம். நல்லதுக்கு குரல் கொடுக்கிறோம். அது மற்றவர்களுக்கு தவறாக தெரிகிறது. அவர்களை பற்றி நாம் கண்டுகொள்ள வேண்டாம். நாம் யாரையும் எதிரியாக நினைக்க வேண்டாம். போராட்டம் எதுவும் நடத்த வேண்டாம். நடப்பதெல்லாம் நன் மைக்கே என்று நினைத்துக் கொண்டு உங்கள் வேலையில் கவனம் செலுத்துங்கள்' என்று அறிவுரை கூறி அவர்களை அனுப்பியுள்ளார்.
0 கருத்துரைகள்:
Post a Comment