புலிகளைத் தோல்வியுறச் செய்வது எளிதான காரியமல்ல - அமெரிக்க நாளிதழ் ஆசிரியர்
>> Sunday, September 7, 2008
|
|
மிகவும் வல்லமை படைத்த போராளிகளைக் கொண்ட புலிகள் அமைப்பைத் தோல்வியுறச் செய்வது எளிதான காரியமல்ல என்று வோல் ஸ் ரீட் ஜேர்னல் (WALL STREET JOURNAL) என்னும் நாளிதழ் தனது ஆகஸ்ட் 28ம் திகதிய ஆசிரியர் தலையங்கத்தில் குறிப்பிட்டுள்ளது. அமெரிக்காவிலிருந்து பிரசுரமாகும் அந்த இதழின் ஆசிரிய தலையங்கத்தில் மேலும் கூறப்பட்டுள்ளதாவது:- இலங்கை இராணுவம் வடக்கு முனையில் தமிழ் புலிப் போராளிகளுக்கு எதிரான முழு அளவிலான தாக்குதலை இரண்டு மாத காலமாக மேற்கொண்டு வருகின்றது. கால் நூற்றாண்டு காலமாக நாட்டைக் கலக்கி வந்த யுத்தத்திற்கு முடிவு காணப்படலாம். அந்தப் பிராந்தியத்தில் பெருமளவு பகுதிகளைத் தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்து விட்டதாகவும் புலிகளின் தலைநகர் கிளிநொச்சியையும் விரைவில் கைப்பற்றி விடலாமெனவும் அது குறிப்பிடத்தக்க முக்கிய வெற்றியாகுமெனவும் அரசாங்கம் கூறுகின்றது. யுத்த நடவடிக்கை அதிசயிக்கத்தக்க வகையில் துரிதப்படுத்தப்படும் எனினும் மரபு முறையான யுத்தத்தின் வெற்றி சமாதானத்தின் வெற்றிக்கான ஆரம்பமாக மாத்திரமே அமையும். 2006 இல் கிழக்கு மாகாணத்தில் மேற்கொண்ட நடைமுறையே அரசாங்கம் பின்பற்றுகின்றது. தமிழ் போராளிகளுக்கு எதிராகப் பாரிய தாக்குதலை மேற்கொண்டு அங்கு ஜனநாயக ஆட்சியை ஏற்படுத்தியது. கிழக்கில் சில வன்செயல்களுக்கு மத்தியில் இரண்டு தேர்தல்கள் இவ்வருடம் நடத்தி முடிக்கப்பட்டுள்ளன. வாக்காளர்களை அச்சுறுத்திய சில சம்பவம் தொடர்பில் குற்றச்சாட்டுகளும் எழுந்துள்ளன. எனினும் அங்கு அமைதி பூரணத்துவமற்ற நிலையில் உள்ளது. புலிகள் அமைப்பு மிகவும் வல்லமை படைத்த கெரில்லா போராளிகளைக் கொண்டதாகும். அவர்களைத் தோல்வியடையைச் செய்வது இலகுவான காரியமல்ல. அண்மைக்காலமாக அரசாங்கம் தனது நடவடிக்கையில் முன்னேற்றம் கண்டாலும் புலிகள் திறமைமிக்க போராளிகளைப் பின்புலத்தில் கொண்டுள்ளார்கள் என்ற ஊகம் நிலவுகிறது. அரசாங்கம் வென்றாலும் எஞ்சியுள்ள போராளிகள் காடுகளில் மறைந்திருந்து போராட்டத்தைத் தொடர்வார்கள். 25 வருடகால யுத்தம் 100' 000 உயிர்களைப் பலிகொண்டுள்ளது எனச் சர்வதேச குற்றவியல் தகவல் குழு தெரிவிக்கின்றது. இராணுவ நடவடிக்கை தொடரும் பட்சத்தில் மிதவாத தமிழ் மக்களை போராளிகளிடமிருந்து வேறுபடுத்த அரசியல் தீர்வு ஒன்றை அரசாங்கம் முன்வைக்க வேண்டும். கிழக்கிலும் வடக்கிலும் உள்ள தமிழ் அரசியல் வாதிகளின் கரங்களில் கூடுதல் அதிகாரங்களை ஒப்படைப்பதாக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் அரசாங்கம் முன்னர் உறுதிமொழியளித்திருந்தது. இதுவரை அது நிறைவேற்றப்படவில்லை. கிழக்கில் புதிதாகத் தெரிவு செய்யப்பட்ட உள்ளூராட்சி மற்றும் மாகாண சபைகளுக்குத் தமது பகுதிகளில் பொருளாதார செயல் திட்டங்களைக் கையாளச் சிறிதளவு அதிகாரமே வழங்கப்பட்டுள்ளது. உதாரணமாக உள்ளூராட்சி மன்றங்களுக்கு அதிகளவு அதிகாரங்கள் வழங்கப்படுவதற்கான பிரேரணைகளை அரசாங்கம் முடங்க வைத்துள்ளது. தொடர்ந்து நிலவும் இந்த நிலையை நீக்குவதற்கு ஒரு உடன்படிக்கையின் மீது முன்னேற்றம் காண்பதற்கான பரந்தளவிலான தீர்வுத் திட்டம் குறித்து ஆராய சர்வ கட்சிப் பிரதிநிதிகள் குழுவை அனுமதிக்க வேண்டும். மனித உரிமைகள் ஆணைக்குழு மற்றும் தேசிய பொலிஸ் ஆணைக்குழு போன்ற முக்கிய நிறுவனங்களை மேற்பார்வையிடும் சுயாதீன அரசியலமைப்புச் சபையை மீளமைப்பதன் மூலம் அரசாங்கம் நம்பிக்கையைத் தோற்றுவிக்கச் செய்யலாம். சிறுபான்மைத் தமிழ் மக்களுக்கும் பெரும்பான்மைச் சிங்கள மக்களுக்கும் இடையில் நிலவும் இனப்பிரச்சினைக்கு சமரச அரசியல் தீர்வு குறித்த அரசாங்கத்தின் முக்கியத்துவத்தை தமிழ் மக்களுக்கு எடுத்துக் காட்டுவதாக இந்த இரு நடவடிக்கைகளும் அமையும். இதனைப் பின்பற்றுவதற்கு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ விரும்பாமை பிரச்சினையின் ஒரு பகுதியாகும். சிங்கள தேசாபிமானத்தைக் காட்டி அவர் 2005 ல் ஆட்சிக்கு வந்தார். இராணுவத் தீர்வு என்பது தேர்தல்களில் நல்ல பலனைக் கொடுத்துள்ளது. அவருடைய கூட்டமைப்பு நடந்து முடிந்த இரண்டு மாகாணசபைத் தேர்தல்களிலும் பெரும் வெற்றி பெற்றது. இதனை அரசாங்கத்தின் மீதான மக்கள் நம்பிக்கையைப் பிரதிபலிப்பதாகக் கூறப்பட்டது. அரசியல் தொடர் நடவடிக்கைகள் சர்ச்சை மிக்கதாகவே உள்ளன. வடக்கில் புலிகளுடனான யுத்தம் போரை முடிவுக்குக் கொண்டு வருவதில் முக்கிய இடத்தை வகிக்கின்றது. எனினும் போராளிகள் நீங்கிய பின்னர் கைவிடப்படும் மிதவாதத் தமிழ் மக்களுக்கு அரசியல் தீர்வின் மூலம் சமாதானம் கிட்ட வேண்டும். |
http://www.tamilwin.com/view.php?2a36QVH4b33X9ECe4d46Wn5cb0bf7GU24d3kOpD2e0dzZLuSce02g2hF0cc3tj0Cde
0 கருத்துரைகள்:
Post a Comment