சுவிஸ் வங்கியில் ரகசிய சேமிப்பு: தகவல் தர நிபந்தனை
>> Tuesday, February 23, 2010
புதுடில்லி :"சுவிஸ் வங்கிகளில் ரகசிய கணக்கு வைத்திருப்போர் பற்றி எந்த நாடு விவரம் கேட்டாலும், அந்த நபர்களின் பெயர் மற்றும் அவர்கள் எந்த வங்கியில் கணக்கு வைத்துள்ளனர் என்ற விவரங்களை தர வேண்டும்' என, சுவிஸ் வங்கியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. சுவிட்சர்லாந்து நாட்டில் உள்ள வங்கிகளில், இந்தியா உட்பட பல நாடுகளைச் சேர்ந்தவர்கள், தாங்கள் சட்ட விரோதமாக சேர்த்த கோடிக்கணக்கான ரூபாய்களை டிபாசிட் செய்துள்ளனர். இப்படி டிபாசிட் செய்துள்ளவர்களின் பெயர் மற்றும் விவரங்கள் ரகசியமாக வைக்கப்படுகின்றன.ஆனால், அமெரிக்கா மற்றும் ஜெர்மன் உட்பட பல நாடுகள், சுவிஸ் வங்கிகளுக்கு எதிராக தற்போது போர்க்கொடி தூக்கியுள்ளன. ரகசிய கணக்கு வைத்துள்ள தங்கள் நாட்டவர்களின் பெயர், விவரங்களை வெளியிட வேண்டுமென, வலியுறுத்தி வருகின்றன. தங்கள் நாட்டில் வரி ஏய்ப்பு செய்த பலர், சுவிஸ் வங்கிகளில் பணத்தைக் குவித்துள்ளதாகவும் கூறி வருகின்றன. சுவிஸ் வங்கியிடம் சேமித்தவர்களின் பட்டியலைப் பெற வேண்டும் என்று பல நாடுகள் விரும்புகின்றன. வரி மோசடி மற்றும் வரி ஏய்ப்பு என்ற இரண்டையும் தனித்தனியாக சுவிஸ் வங்கி அணுகுகிறது. வரி ஏய்ப்பு செய்தவர்கள் பற்றிய தகவல் தேவை என்று கூறி, அமெரிக்கா ஒரு பட்டியலைப் பெற்று விட்டது. இந்தியாவைப் பொறுத்தளவில் இம்மாதிரி தகவலைப் பெற, இரு நாடுகளுக்கும் இடையே உரிய சட்ட நடைமுறைகள் இல்லை என்பதையும் சுவிஸ் வங்கி அதிகாரிகள் தெரிவித்தனர். அதனால், யாரைப் பற்றிய தகவல் என்பதற்கான விளக்கம் தந்தால் உதவ முடியும் என்று புது நிபந்தனையை வைத்திருக்கிறது.இந்நிலையில், சுவிஸ் வங்கியாளர்கள் சங்கம் கூறியுள்ளதாவது:சுவிஸ் வங்கியில் பணத்தை டிபாசிட் செய்துள்ள தங்கள் நாட்டவர்களைப் பற்றி, எந்த ஒரு நாடு அறிய விரும்பினாலும், அந்த நபர்களின் பெயர் மற்றும் சுவிஸ் நாட்டில் எந்த வங்கியில் அவர்கள் கணக்கு வைத்துள்ளனர் என்ற விவரங்களை தெரிவிக்க வேண்டும். எங்கள் நாட்டு வங்கிகளில் கணக்கு வைத்துள்ள அப்பாவிகளைக் காப்பாற்றவே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதுவே சரியான நடவடிக்கை என்றும் கருதுகிறோம். வரி ஏய்ப்பு உட்பட வரி தொடர்பான அனைத்து வழக்குகளிலும் மற்ற நாடுகளுக்கு உதவவே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. சுவிட்சர் லாந்து நாட்டில் வரி ஏய்ப்பு என்பது கிரிமினல் குற்றமல்ல. இந்த குற்றத்திற்காக அவர்களுக்கு சிறைத் தண்டனை விதிக் கப்படாது. மாறாக கடும் அபராதம் மட்டுமே விதிக்கப்படும்.இவ்வாறு சுவிஸ் வங்கியாளர்கள் சங்கம் கூறியுள்ளது source:dinamalar
www.thamilislam.co.cc